July 27, 2018
தண்டோரா குழு
திருப்பூரில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் செய்து அவரது உயிரிழப்புக்கு காரணமான கணவர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்-கிருத்திகா தம்பதியினர்.கிருத்திகா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன்,பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு ஏற்கனவே 5வயதில் ஹிமானி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கருவுற்றிருக்கிறார்.இவர்களுக்கு இயற்கை மருத்துவத்தில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.இந்நிலையல் கிருந்திகா இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த நிலையில் இயற்கை முறையில் யூ டியூப் உதவியுடன் பிரசவம் செய்வதற்கு தயாராகி உள்ளனர்.இதற்காக யூ டியூப் மூலம் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்வமுடன் பல்வேறு வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கிருத்திகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கணவர் கார்த்திகேயன் அவரது தாய் காந்திமதி மற்றும் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் சேர்ந்து கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.ஆனால் நஞ்சுக்கொடி வெளிவராததால், கிருத்திகா மயக்கமடைந்தார்.இதையடுத்து கிருத்திகாவின் குடும்பத்தினர்,108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.எனினும்,ஆபத்தான நிலையில் கிருத்திகா இருந்ததால்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து,இந்த விவகாரத்தில் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன்,நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கார்த்திகேயன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 உட்பிரிவு ஏ-வின் கீழ் அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,தலைமறைவாக உள்ள பிரவீன் – லாவண்யா தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில்,இவ்விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.