October 1, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் இந்த வருட வடகிழக்கு பருவமழை,சராசரி மழையளவை விட கூடுதல் மழையளவு கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதால்,விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், இந்த வருட வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையே அதிகளவில் எதிர் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 15% குறைவான அளவே பெய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகளவு இருக்கும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்து உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 924 மில்லி மீட்டர் மழையளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக சென்னை,கடலூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குறைந்தபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 281மில்லி மீட்டர் மழையளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடலோர பகுதி மாவட்டங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.
சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும்,குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மூன்று மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும் என்பதால்,பண்ணைகுட்டைகள் மூலமாக தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மானாவாரி சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் வரை மழைப்பொழிவு இருக்கும் என்பதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி உள்ளனர்.