May 4, 2018
தண்டோரா குழு
தமிழகக் கடற்கரையோரம் பயணிக்கும் பலமான கடற்காற்று வெப்பச்சலனத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் மே 4 முதல் மே 13 வரை கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்டாவைப் பொருத்தவரை முற்பகல் உயரவேண்டிய வெப்பநிலையைத் தடுக்கும் வகையில் சிலநாட்கள் கடற்காற்று அதிராம்பட்டிணம்-கோடியக்கரை இடையே நுழைந்து செல்லும்.அன்று மேக மூட்டம் அதிகமாக இருக்கும்.இது வெப்பச்சலன மழையைத் தடுக்கும்.இதனால் டெல்டா பகுதியில் சில இடங்களில் கன மழைக்கும்,சில இடங்களில் மழை இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
மேலும் வேலூர்,மேற்கு,கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருவண்ணாமலை மேற்கு,விழுப்புரம் மேற்கு, நாமக்கல்,சேலம்,ஈரோடு,நீலகிரி,கோயம்புத்தூர்,கரூர்,திருச்சி,திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டப்பகுதிகளில் தினசரி மதியத்திற்கு மேல் மாலை, இரவு,நள்ளிரவு,அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் மழை பெய்து கொண்டிருக்கும்.