November 21, 2018
தண்டோரா குழு
பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி கோர முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டுள்ளார்.
கடந்த 16-ந் தேதி‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில் நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 45-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக,நெல்,தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதையடுத்து,நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை நேரில் சந்தித்து,புயல் சேதம் குறித்து விளக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.இதையடுத்து,நாளை காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.