October 24, 2018
தண்டோரா குழு
பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள்,சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.இதனையடுத்து,இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதற்கிடையில்,மீடு புகாரில் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்,பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக புதிய சட்ட வரைவுகளைப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த குழுவில்,மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,நிதின் கட்காரி,மேனகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.