October 30, 2018 தண்டோரா குழு
எனது செங்கோல் கதையை விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தீபாவளி பரிசாக அளிக்கிறேன் என்று வருண் என்கிற ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சர்கார் படத்தின் கதை,தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வாதிட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்,30 ஆம் தேதியன்று பதில் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதி,படத்திற்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டார்.இதற்கிடையில்,சர்கார் கதையும் செங்கோல் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் வந்திருந்தனர்.இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.படத்திற்கான கதை என்று டைட்டில் கார்டில் நன்றி ராஜேந்திரன் என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருண் ராஜேந்திரன்,
“நான் படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுக்கவில்லை.விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணியாற்றியதால் தான் எனக்கு இந்த போராட்ட மனநிலை வந்தது.டைட்டிலில் எனது பெயரை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.இந்த அங்கீகாரம் தான் எனக்கு கிடைத்த இழப்பீடு.விஜய் தலைமையில் சர்கார் அமைக்க எனது செங்கோலை விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தீபாவளி பரிசாக அளிக்கிறேன்”என்று கூறினார்.