November 17, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்கு அடுத்த முறை கொரில்லா தந்திரங்களுடன்,எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சொல்லாமல் செல்வோம் என்று திருப்தி தேசாய் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர்.அப்போது இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்ற உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதோடு,சீராய்வு மனுக்களை விசாரித்தாலும், முந்தைய உத்தரவுக்கு தடையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும்,மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் வழக்கறிஞர்கள் வாதத்துடன் நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையில் நீதிமன்ற அறையில் நடைப்பெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில்,வரும் நவம்பர் 16ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள்,அது தொடர்பான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கேரளா அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,காங்கிரஸ் பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டன.இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ்,பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இதையடுத்து இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.கூட்டத்திற்குப் பின்னர்,உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மராட்டியத்தை சேர்ந்த திருப்தி தேசாய்,என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு கண்டிப்பாக போவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.இது குறித்து அவர் சபரிமலைக்கு நாங்கள் வரும் அன்றைய தினம் கேரள அரசு எங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் திருப்தி தேசாய் மற்றும் அவருடன் சில பெண் ஆர்வலர்களும் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர்.அவர்களை வெளியே வரவிடாமல்,பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொச்சி விமானநிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தினால் அவரால் விமான நிலையத்திலிருந்து வெளிய வரமுடியவில்லை.இதனை தொடர்து அங்கிருத்து செல்லுமாறு போலீசார் அவரை கேட்டுகொண்டனர்.ஆனால் அவர் அயப்பனை தரிசனம் செய்யாமல் அங்கிருத்து போவதில்லை என மறுத்தார்.ஆனால் போலீசார் அவரை கேட்டுகொண்டதன் பேரிலும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் தனது முடிவை மாற்றினார்.இதனால் அவர் புனே திரும்பி செல்வதாக சம்மதித்தார்.
இதனை தொடர்ந்து புனே விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் நாங்கள் கொச்சி விமானநிலையதில் வந்து இறங்கியவுடன் போராட்டக்காரர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி, மேலும் என்னை திரும்பப் போகச்சொல்லி மிரட்டல் விடுத்தனர். அங்கு நடந்த சூழலை கருத்தில் கொண்டு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் எனக்கூறி போலீஸாரும் எங்களைத் திரும்பிச்செல்லி அறிவுறுத்தினர்.
எங்களால் இம்மாநில மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.அதனால்,நாங்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தோம்.அடுத்த முறை நாங்கள் வரும் போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தருவதாக போலீஸார் தெரிவித்தனர்.இந்த முறை நாங்கள் வருவது குறித்து தகவல் தெரிவித்து விட்டு சபரிமலைக்குச் செல்ல முயன்றோம்.ஆனால்,அடுத்த முறை கொரில்லா தந்திரங்களுடன்,எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சொல்லாமல் சபரிமலைக்குச் செல்வோம் அவ்வாறு அவர் கூறினார்.