November 19, 2018
தண்டோரா குழு
கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக,ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில்,10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.எனினும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன்,சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.இதனால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில்,கோவில் மண்டல பூஜை,மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர்.அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.ஆனால் பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதைப்போல் சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர்.இதையடுத்து,இதுகுறித்து தகவல் பரவியதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர்.இதனால்,அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.மேலும்,அரன்முலா,கொச்சி,கொல்லம்,ஆலப்புழா,ரன்னி,தொடுபுழா, கலாடி,மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.