November 7, 2018 தண்டோரா குழு
அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில்உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலையை,பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி திறந்து வைத்தார்.அதைபோல் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில்,தீபாவளியை முன்னிட்டு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமஜென்ம பூமிக்குச் சென்றார்.அங்குள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படவுள்ளது.அயோத்தியில் ராமர் சிலை வைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அவற்றில் ஒரு இடத்தில் ராமர் சிலை வைக்கப்படும்.ராமர் சிலை அமைக்கும் பணிக்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.அமைக்கப்படும் ராமர்சிலை அயோத்தியின் அடையாளமாக திகழும்.அயோத்தி நகரம் உத்திரபிரதேசத்தின் சிறந்த நகரமாக கட்டமைக்கப்படும்.மேலும், அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி என்றும் கூறியுள்ளார்”.