November 29, 2018
தண்டோரா குழு
பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்குத் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இயின் கீழ் உள்ள தேசியத் தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது.அடுத்த ஆண்டு மே ஐந்தாம் நாள் நடைபெறும் நீட் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,நீட் தேர்வு எழுத வயது வரம்பை தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது.இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,பொதுப்பிரிவைச் சேர்ந்த 25-வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
மேலும்,நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதலாக ஒருவாரம் காலக்கெடு வழங்க வேண்டும் எனத் தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இடைக்கால சலுகை அளிக்கப்பட்டுள்ளது.