• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணப்பற்றாக்குறை நீடித்தால் வன்முறை ஏற்படும் அபாயம் – ராமதாஸ் எச்சரிக்கை

November 29, 2016 தண்டோரா குழு

பணப் பற்றாக்குறை நீடித்தால் வன்முறைகள் அதிகரித்து சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பணப் புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் இந்தப் பாதிப்பும், அவதியும் அடுத்து வரும் நாட்களில் உச்சக் கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வங்கிக் கிளைகளில் வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரமும், ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 14-ம் தேதி முதல் இந்த உச்சவரம்பு வங்கிக் கிளைகளில் வாரத்துக்கு ரூ. 24,000 என்றும், ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ. 2,500 எனவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், வங்கிகளிலும், ஏ.டி.எம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் இந்த அளவு பணத்தை மக்களால் எடுக்க முடியவில்லை.

அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத ஊதியம் வாங்குவோரிடம் அன்றாட செலவுக்குக் கூட பணம் இல்லை. முதல் தேதி பிறந்தவுடன் ஏராளமான செலவுகள் அவர்களுக்கு அணிவகுத்துக் காத்திருக்கின்றன. அதற்கான பணத்தை அவர்கள் மாத ஊதியத்திலிருந்துதான் எடுத்தாக வேண்டும்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் என குறைந்தது ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடிப் பேர் வரை தங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்கான பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் குவியும் நிலை அடுத்த இரண்டு நாட்களில் ஏற்படப் போவது உறுதி.

வங்கிகளுக்கு கூடுதல் பணம் வழங்கப்படாத நிலையில், ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கவுள்ள வாடிக்கையாளர்களின் பணத் தேவையை வங்கிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன?
வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல், வங்கி அதிகாரிகளுடன் மோதல், ஏ.டி.எம். எந்திரங்கள் மீது தாக்குதல் என வன்முறைகள் நடந்துள்ளன.

முதல் தேதிக்குப் பிறகும் பணப் பற்றாக்குறை நீடித்தால் இந்த வன்முறைகள் அதிகரித்து சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் டாக்டர் ராமதாஸ்.

மேலும் படிக்க