October 23, 2018
பி.எம். முஹம்மது ஆஷிக்
கவண் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பிரியதர்ஷினி ராஜ்குமார்.இவர் சில விளம்பரங்களில் மாடலாகவும் நடித்திருக்கிறார்.இவர் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற `Dazzle Mrs India World Classic 2018′ போட்டியில் பங்கேற்று,”மிஸஸ் இந்தியா வேர்ல்டு” கிளாசிக் பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது குறித்து பிரியதர்ஷினி ராஜ்குமாரிடம் பேசுகையில்,
பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்தார்.கவண் படத்திற்கு பின்னர் நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறேன்.ஒரு மாடல் போட்டோஷூட் எடுத்த போது எனக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது.இதனை முறையா கற்றுக்கொள்ள “Iris glam” படிப்பு படிச்சேன்.அப்போது தான் இந்த போட்டி நடப்பது பற்றி தெரிந்தது.இதற்காக சென்னையில் ஆடிஷன் நடைபெற்றது.ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது.
நான் `saraswathi Educational cultural and Charitable Trust’-ல் செயலாளராகவும்,சமூக ஆர்வலராகவும் இருக்கிறேன்.பலருக்கும் என்னால் முடிஞ்ச உதவிகளை செய்து வருகிறேன்.ஒருவேளை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அதன் மூலமாக பலருக்கும் உதவ முடியும்.பல என்ஜிஓக்களுடன் இணைந்து செயல்பட முடியும் என எண்ணினேன்.அதனால் தான் இதில் கலந்து கொள்ள நான் முடிவு செய்தேன்.
பின்னர் ஆடிஷனில் கலந்து கொண்டு என்னால் முடித்த அளவு என திறமையை வெளிப்படுத்தினேன்.இந்த ஆடிஷனில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திர,தெலுங்கான என தென்னிந்திய அளவில் இருந்து பலர் கலந்துக் கொண்டனர்.இந்த போட்டி நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.அதில் நான் 35 -45 வயது பிரிவில் கலந்து கொண்டேன். எங்களது பிரிவில் இந்தியா முழுவதிலும் இருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் பலகட்ட போட்டிகளுக்கு பின் இறுதி சுற்றுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர் அதில் நானும் ஒருவர்.
ஒவ்வொரு சுற்றிலும் தேர்வாகி அடுத்தகட்டத்துக்குப் போக ஆரம்பிச்சதும்,எனக்குள்ளே நம்பிக்கையும் உற்சாகமும் அதிகமாயிருச்சு.எனினும் டைட்டில் வெற்றி பெறுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கலை.”Dazzle Mrs India World Classic 2018″டைட்டிலை பெற்றது மிகவும் பெருமையாக இருந்தது.இனிமே கண்டிப்பா பலருக்கும் என்னால உதவ முடியும்.இந்த டைட்டில் அதுக்கு முக்கியமா உதவி பண்ணும்னு நம்புறேன்.இதன் மூலம் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகிறேன்.
சினிமா மீது ஆர்வம் எப்படி வந்தது?
“நடிப்பு,எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும்.திரைப்படங்கள் பார்க்கும் போது எனக்கு நடிப்பு மீது ஆசை வர ஆரம்பித்துவிட்டது.அப்போது கே.பாலசந்தர் இயக்கிய ‘மின்பிம்பங்கள்’ சீரியலில் நடித்தேன்.அதன்பின் ‘ரமணி vs ரமணி’ நாடகத்துல கூட நடிக்க வாய்ப்பு வந்தது.பின்னர் நான் ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன்.அதற்கு பிறகு,14 வருடம் நடிக்கும் எண்ணம்,அதற்கான சூழல் எதுவும் எனக்கு அமையவில்லை.ஆனாலும்,என் மனதில் நடிக்கும் எண்ணம் ஆழமாக இருந்தது.மீண்டும் இந்தியா வந்த பிறகு சில விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது.
சில விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போது,தான் 24am ஸ்டூடியோவில் இருந்து அம்மா வேஷம் இருக்கு நடிக்க விருப்பம் இருக்கான்னு கேட்டாங்க.நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.அந்த படம் தான் ரெமோ.அப்படியே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.அந்த படம் நடித்து முடித்த பிறகு தான் கவண் படத்தில் நடிக்கும் வாயுப்பு எனக்குக் கிடைத்தது.‘கவண்’ படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். அப்படம் மூலம் தான் என்னை நிறைய பேருக்கு தெரிந்தது.நான் யாரு என்று தெரியாமல் கூட பலரும் என்னை பாராட்டினார்கள்.
தற்போது விளம்பரங்கள் மற்றும் பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.பாலா இயக்கத்தில் வர்மா,ஜெய்யின் நீயா 2,சங்கத் தலைவன்,பிரபு தேவா நடிக்கும் பொண் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.பொதுவாக என் வயது பெண்கள் எல்லாம் அம்மா கதாப்பாத்திரம் அல்லது வில்லி கதாப்பாத்திரம் மட்டுமே பண்ண முடியும் என்ற நிலை உள்ளது.
அதனை மாற்றி எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தருணதிற்காக காத்திருக்கிறேன்.அதைபோல் நம் இருக்கும் துறை மூலம் இந்த சமுதாயத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரவேண்டும் எண்ணினேன் அதற்காக தான் தற்போது சமூக அக்கறை கொண்ட குறும்படங்களிலும் நடித்து வருகிறேன்” என்றார்.