November 22, 2018
தண்டோரா குழு
காதலன் கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்று துண்டு,துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு பரிமாறிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகம்.இங்குள்ள அல் அன் நகரில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.அவருக்கும் அவருடைய தாய் நாட்டில் இருந்து அல் அன்னுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த 25 வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது.இருவரும் கடந்த 7 ஆண்டு காலமாக கணவன்,மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,கடந்த 6 மாதங்களுக்கு முன்,அந்தப் பெண்ணிடம்,தான் மொராக்கோ நாட்டில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் காதலன் தெரிவித்துள்ளார்.இதை அறிந்த அந்தப் பெண், தன்னை விட்டு,மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறார் என்பதால் காதலன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.
இதன் பின் அப்பெண் காதலனை சாமர்த்தியமாக பேசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.அங்கு அவர் வந்த பின்னர் ஆவேசமாக தலையில் தாக்கி உள்ளார்.இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.அதுமட்டுமல்லாமல்,தனது காதலனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி,அதை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாரம்பரிய உணவான ’மச்பூஸ்’ (ஒருவகை பிரியாணி) எனும் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார்.
இதற்கிடையே,மூன்று மாதமாக தனது அண்ணனை காணாமல் தவித்துக் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட வாலிபரின் சகோதரர்,இதுகுறித்து விசாரிப்பதற்காக தனது அண்ணனுடன் சேர்ந்து வாழ்ந்த மொராக்கோ பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு தனது அண்ணனைப் பற்றி அவர் கேட்டுள்ளார்.ஆனால்,அவர் வேறு பெண்ணை அவர் விரும்பி,அவளுடன் சென்று விட்டதாகவும் தன் வீட்டிற்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.ஆனால்,அவரது பேச்சில் மர்மம் இருப்பது போல் அந்த நபருக்கு தெரிந்துள்ளது.
இந்நிலையில்,கொல்லப்பட்ட அந்த இளைஞரின் சகோதரர் போலீஸில் புகார் செய்தார்.தனது சகோதரரை போலீஸாரின் உதவியுடன் தேடி வந்துள்ளார்.இதில் தனது சகோதரரின் காதலியின் பழைய வீட்டுக்குச் சென்று போலீஸாரின் உதவியுடன் சோதனையிட்டதில்,மனித பற்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து, அந்தப் பற்களை போலீஸார் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் கொல்லப்பட்டது தேடப்பட்டு வந்த அந்தப் பெண்ணின் காதலர் என்பதை போலீஸார் உறுதிசெய்தனர்.இதையடுத்து,அந்த பெண்ணைக் கண்டுபிடித்த போலீஸார் 20-ம் தேதி கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னைக் காதலித்து ஏமாற்றியதால்,தனது காதலனை 6 மாதங்களுக்கு முன் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் உடலை வெட்டி பிரியாணி சமைத்துப் பரிமாறினேன் என்றும்,மீதமிருந்த உடல் பாகங்களை நாய்க்கு உணவாக அளித்தேன் என்றும், தனக்கு உதவியாக ஒருவர் இருந்தார் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு போலீசாரே அதிர்ந்து போய் விட்டனர்.இதையடுத்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் என்று போலீஸார் கூறுகின்றனர்.