November 17, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து கூட்டமைப்பின் கேரள மாநில தலைவர் சசிகலா கைது செய்யப்பட்டதை கண்டித்து,இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து கோவை வரும் சுமார் 80 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.இன்று அதிகாலை குருவாயூர் சென்ற தமிழக பேருந்து கேரளா எல்லையான வாளையாறு வரை சென்ற நிலையில் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும்,ரயிலில் கேரளா சென்றாலும்,அங்கிருந்து தங்களது பகுதிக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காது என்பதால்,கேரளாவில் இருந்து கோவில்களுக்கு வந்த பயணிகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.