August 18, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளவிருந்த நிலையில் கொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆய்வை ரத்து செய்தார்.
பின்னர் ஆளுநர் சதாசிவம்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது கேரளாவில் வெள்ளம்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000,நிதியுதவியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.