August 14, 2018
தண்டோரா குழு
கேரளாவில் ஆட்சி செய்பவர்கள் மாற்று கட்சியினராக இருந்தாலும்,கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சார்பில்,பொருட்கள் மற்றும் நிதியினை வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் கோவையில் உள்ள பல்வேறு தெருக்களில் பொதுமக்களிடமிருந்து உண்டியல் மூலமாக நிதி வசூல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதிஸ்ரீனிவாசன்,
“கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.தற்போது,முதல் கட்டமாக நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக நிவாரண வழங்குவதற்காக மத்தியக் குழு ஆய்வு செய்து பின்னர் கேரளாவிற்கு தேவையான நிதியுதவிகள் வழங்கப்படும் என கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினர் தவறி விட்டதாகவும்,எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும்,மு.க.அழகிரியின் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சி தான் காரணம் என கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,தமிழகத்தில் எது நடந்தாலும் பாரதிய ஜனதா கட்சி தான் காரணம் என கூறுவதாகவும்,இதனால் இப்போதாவது பாரதிய ஜனதா கட்சி பெரியகட்சி என மதிக்க ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சியான விஷயம்”இவ்வாறு பேசினார்.