November 14, 2018
தண்டோரா குழு
சபரிமலை தொடர்பான விவகாரங்களுக்கும் முடிவு காண அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர்.அப்போது இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா? ஏற்காதா? என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்ற உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதோடு,சீராய்வு மனுக்களை விசாரித்தாலும்,முந்தைய உத்தரவுக்கு தடையில்லை.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும்,மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் வழக்கறிஞர்கள் வாதத்துடன் நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையில் நீதிமன்ற அறையில் நடைப்பெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில் வரும் நவம்பர் 16ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள்,அது தொடர்பான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கேரளா அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேரளா முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ளார்.