August 11, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தென் மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில்,கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அரைநூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால்,கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர்கள் சூர்யா,கார்த்தி இருவரும் சேர்ந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.