November 27, 2018
தண்டோரா குழு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவற்கான கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக இரு தடுப்பணைகள் கட்டி,நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு ரூ. 5912 கோடி நிதி ஒதுக்கியது.இதற்கிடையில்,மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால்,தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட சேலம்,நாமக்கல்,கரூர்,திருச்சி,தஞ்சை,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி,விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று தமிழக அரசும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்த சூழலில்,கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. இந்நிலையில்,வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால்,அணை கட்டும் பணியை கர்நாடக அரசு வேகப்படுத்தும் என்று தெரிகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நீண்ட இழுவைக்கு பிறகு மேலாண்மை ஆணையம் அமைத்த மத்திய அரசு,தற்போது மீண்டும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக மேகதாது திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக விவசாயி சங்கத்தினர் குற்றம்சாற்றியுள்ளனர்.