November 1, 2018 தண்டோரா குழு
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற 48 மணி நேரமே உள்ள நிலையில் பா.ஜ.க வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியமைத்து வருகிறது.கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குமாரசாமி செனப்பட்டனா,ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று கர்நாடக முதல்வரானார்.இதையடுத்து ராம்நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.இதற்கிடையில்,ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிந்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியாக உள்ள ராம்நகர்,ஜம்கண்டி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைப்போல்,கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டார்.அதைப்போல்,மஜத சார்பில் கர்நாடகா முதலமைச்சரும்,மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுகிறார்.
இந்நிலையில்,ராம்நகர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சந்திரசேகர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அப்போது அவர்,தனக்காக பாஜக தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்ய வரவில்லை ஆதரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.
பாஜக வேட்பாளர் கட்சி தாவியதையடுத்து ராம்நகரில் போட்டியிடும் கர்நாடகா முதலமைச்சரும்,மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமியின் மனைவி அனிதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.