November 22, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த 16-ந் தேதி ‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக நெல்,தென்னை,வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதையடுத்து,நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் நேற்று மாலை 5.20 மணிக்கு டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில்,தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி வழங்கக் கோரியும்,புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின்போது,அமைச்சர் ஜெயக்குமார்,மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
“கஜா புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பிரதமரிடம் சேத மதிப்பு குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கோரப்பட்டுள்ளது.நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து உள்ளோம்.தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைந்துள்ளது.சாலை மார்க்கமாக சென்றால் முழுவதுமாக பார்க்க முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்றோம்.கடந்த காலங்களில் விட தற்போது சேதம் அதிகமாக இருக்கிறது.தமிழகத்தில் ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழு வரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்” எனக் கூறினார்.