November 22, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகி தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு,திமுக மகளிர் அணி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கபட்டு திருச்சி – கலைஞர் அறிவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“திமுக சார்பில் பல மாவட்டங்களில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் உருக்குலைந்துள்ள நிலையில்,மாநில அரசு கேட்கும் முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு.திமுக இதில் அரசியல் செய்யவில்லை.அரசியல் செய்வதாக பொய் செய்தி பரப்பப்படுகிறது.ஹெலிகாப்டரி்ல சென்று ஆய்வு செய்தது பற்றி முதல்வர் பதில் வேடிக்கையாக உள்ளது.மீனவர்கள்,விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் ஏன் கேட்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்ட பிறகு முதல்வர் டெல்லி சென்றிருக்க வேண்டும்.ஏற்கனவே,ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசு,இந்த கஜா புயலுக்காவது நிதியை முழுமையாக வழங்கிட வேண்டும்.மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது உண்மை என்றால் தமிழக அரசு போராடி நிதியை பெற வேண்டும்”.இவ்வாறு பேசினார்.