November 28, 2018
தண்டோரா குழு
கஜா புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.உயிர் சேதமும்,பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.தென்னை,வாழை,நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது.சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன.
மேலும்,இதனை தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவமக்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்படுள்ளது.இதற்கிடையில் புயல் பாதிப்புக்குள்ளான அனைத்து பகுதியை சேர்ந்த மக்களும் நீர்,உணவு,உடை,இருப்பிடம் போன்ற அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகள் போல வாழ்கின்றனர்.இதனால் அவர்களுக்கு நாடெங்கிலும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண உதவிகள்,நன்கொடைகள் என பல்வேறு உதவிகள் வந்துக் கொண்டிருகின்றன.
இதனை தொடர்ந்து அமெரிக்கா,வாஷிங்டனில் இயங்கிவரும் எய்ம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ‘டைன் ஃ பார் கஜா’ என்ற பெயரில் தமிழர்கள் பாணியில் மொய்விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதற்காக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற உணவகம் சார்பில் இலவசமாக உணவும் வழங்கப்பட்டது.மேலும்,வாஷிங்டன் நகரில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தி நன்கொடை வழங்கி சென்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.மேலும் 8 கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே,வாஷிங்டன் தமிழ் சங்கம்,எய்ம்ஸ் இந்தியா போன்ற,60 அமெரிக்க தமிழ் அமைப்புகள்,புயல் பாதித்த டெல்டா மாவட்ட கிராமங்களை தத்தெடுக்க ஒப்புதல் வழங்கிய நிலையில்,இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.