November 22, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும்என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர்,திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக,நெல்,தென்னை,வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பிலும்,தனியார் நிறுவனம்,அரசியல் கட்சிகள்,திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,நடிகர் லாரன்ஸ் கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளேன்.உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதம் தேவை….!கஜா புயலால் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்…எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்….ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன்.வேதனை அடைந்து விட்டேன்…அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்…மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும்….அந்த வீடு மட்டுமில்லை… இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன்…அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித்தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்…
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம் என்பார்கள் நான் அவர்கள் மூலம் இறைவனைக்காண முயற்சிக்கிறேன்.ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்…உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.