November 20, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளுக்காக லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.நடிகர்கள் ரஜினிகாந்த்,விஜய்,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்,இயக்குநர் ஷங்கர்,கவிஞர் வைரமுத்து,சூர்யா,கார்த்தி,ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் என பலரும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.இந்நிலையில்,பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கஜா புயல் நிவாரண நிதியாக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக லைகா குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,கஜா புயலால் 7 மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.இப்புயலின் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் மக்களின் துயர் துடைக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் லைகா குழுமம் 1 கோடியே ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.