November 19, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணப் பணிக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.
புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும்,சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்,புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில்,புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி என அறிவிக்கபட்டுள்ளது. நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்கள்,எம்.பி.க்கள் தங்கள் 1 மாத சம்பளமும் அளிக்கப்படும் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது.
மேலும்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு!அந்த அடிப்படையில் மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட,கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும்,எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் க்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.