November 21, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்புக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.இந்த புயலின் தாக்கத்தால் தஞ்சை,திருவாரூர்,நாகை,ராமநாதபுரம், புதுக்கோட்டை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல்,30,100 ஹெக்டேர் தென்னை,7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.
இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.திரையுலகினர் மட்டுமல்லாது,அரசியல் கட்சியினரும் நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர்.
திமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டதோடு,10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து,தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும்,பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் எனவும் அறிவித்துள்ளார்.