November 21, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரண நிதியாக,முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ 25 லட்சம் வழங்கினார்.
கடந்த 16-ந் தேதி‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 45-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக,நெல், தென்னை,வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.இதுவரை திரையுலகை சேர்ந்த நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்,ரஜினி,விஜய்,விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன்,வைரமுத்து மற்றும் லைகா நிறுவனம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நடிகர் சீயான் விக்ரம் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் ஆன்லைன் (RTGS) மூலம் இன்று வழங்கியுள்ளார்.