October 29, 2018 தண்டோரா குழு
இந்தியாவில் சிறிய குளிர்பானத்தை விட 1ஜிபி டேட்டாவின் விலை குறைவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஜப்பான் இடையிலான 13 வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
“இந்தியர்கள் உலகம் முழுவதும் தீபாவளி வெளிச்சம் போல் பரவி இருக்கின்றனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள்,உலகில் எங்கு சென்றாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்கிறார்கள்.இந்து மதமோ,புத்த மதமோ இவ்விரு மதத்தின் மூலம் ஒன்று தான்.ஜப்பானியர்கள் இந்துக்கடவுள்களையும் வழிபடுகின்றனர்.இந்தியாவிலும், ஜப்பானிலும் சேவை என்ற சொல் ஒன்று தான்.
டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய புரட்சியை உருவாக்கி வருகிறது.இந்தியாவில் 100 கோடிக்கு மேல் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது.மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறி வருகிறது.இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் மேக் இன் இந்தியா மூலம் பொருட்களை தயாரிக்கின்றன.டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது.
எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் தயாரிப்பில் உலக அளவிலான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. செல்போன் தயாரிப்பில் முதலிடத்தை நோக்கி விரைவில் முன்னேறுவோம்.இந்திய கிராமங்களுக்குள் பிராட்பேண்ட் வசதி சென்றடைந்துள்ளது.இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலை சிறிய குளிர்பானத்தை விட விலை குறைவு”.இவ்வாறு பேசினார்.