October 25, 2018
தண்டோரா குழு
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 827 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு,குழந்தைகளின் ஆபாச படங்களை கொண்டுள்ள இணையதளங்களை முடக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையில்,ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பாலியல் உள்ளடக்கங்களை கொண்ட 857 ஆபாச இணையதளங்களை முடக்குமாறு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வை மேற்கொண்டது.இதில்,30 இணையதளங்களில் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் இல்லை என்பதை கண்டறிந்தது.இதையடுத்து,நீதிமன்ற உத்தரவுப் பட்டியலில் உள்ள எஞ்சிய 827 இணையதளங்களை முடக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இணையதளச் சேவை வழங்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள்,உத்தரகண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள 827 இணையதளங்களை முடக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றம் முடக்க உத்தரவிட்டுள்ள 827 இணையதளங்களும் 2015-ல் ஜூலையில் தொலைத்தொடர்புத் துறை பிறப்பித்த தடை நோட்டீஸில் இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 2015 ஆகஸ்ட் 4-ம் தேதி விடுக்கப்பட்ட நோட்டீஸில் தொலைத்தொடர்புத் துறை,குழந்தைகள் பாலியல் உள்ளடக்கம் இல்லாத இணையதளங்களை நீக்குவதற்கு,இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை என்று கூறியிருந்தது.இந்நிலையில்,நேற்று முதல் ஜியோ போன்ற முக்கிய இணையச் சேவைகளில் இந்த 800-க்கும் மேற்பட்ட தளங்கள் செயல்படவில்லை எனச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன.மேலும்,பல நிறுவனங்கள் உடனடியாக இந்தத் தளங்களைத் தடைசெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.தற்போது,படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகிறது.