January 8, 2020
தண்டோரா குழு
மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் H. ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் கோவையில் புகார் அளித்துள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும் மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் H.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்டம் சார்பாக கோவை காவல் ஆணையரை சந்தித்து இன்று புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்,
கடந்த 20.12.2019 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA சட்டத்திற்கு ஆதரவு அளித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள் தனது உரையின் போது “நீ எதோ பள்ளிக்கூட காலேஜ் கேம்பஸ் குள்ள இருந்துகிட்டு கல்லெரியலாம்ன்னு நினைக்காத எப்படி காம்பவுண்டுக்கு வெளிய கல்லு வருதோ அதே மாதிரி வெளில இருந்து குண்டு உள்ள போகும்” என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆராவாரம் செய்தனர். மேலும், மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் என எவ்வித பாகுபாடின்றி அமைதியான முறையில் ஜனநாயக சட்ட வகை முறைகளுக்குட்பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவர்களும் தங்களுடைய எதிர் கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், மக்களுக்கான பொது விவாத மேடைகளிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர் களுக்கு எதிராக, CAA சட்ட ஆதரவாளர்களை திசை திருப்பி கலவரத்தை தூண்டி, இருசாரார்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பேசியுள்ளார். மேற்படி துவேச பேச்சுகளால் கலவரம் ஏற்பட்டால் உயிர் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மாணவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அவர்களுடைய கல்வி நலனும் பாதிக்கப்படும். ஏனென்றால், மேற்படி பேச்சுகளை கேட்டு அங்கு குழுமியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர். இதனால், பொது அமைதி குலையவும் வாய்ப்புள்ளது.
மேலும், வெளியே இருந்து குண்டு உள்ளே போகும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக தீவிரவாதம் செய்பவர் போல் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை சீர் குலைத்து உள்நாட்டு கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார்.
எனவே மேற்படி, தனது துவேச பேச்சுக்களால் உள்நோக்கத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடனும் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் வகையிலும் இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கி மாணவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் தீங்கென்னத்துடன் செயல்படும் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என தெரிவித்துள்ளனர்.