August 27, 2018
தண்டோரா குழு
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் 26ம் தேதி நடைபெறும் என்றும்,மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.இதில்,திமுக தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும்,பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில்,நேற்று வரை இரு பதவிகளுக்கும் ஸ்டாலின்,துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.இதனால்,அவர்கள் இருவரும் போட்டியிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்றைய தினம் மனுக்களை இருவரும் வாபஸ் பெறாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,
தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் காலம் முடிந்தும் அவர்கள் இருவரும் வாபஸ் பெறவில்லை மனுக்களை வாபஸ் பெறாததால் இரு பதவிகளும் போட்டியின்றி நிரம்புவது உறுதியாகிவிட்டது.எனினும்,நாளை திமுக பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.