August 14, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்,இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன்,செயல் தலைவர் ஸ்டாலின்,துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
“நான் தலைவரை மட்டுமல்ல,தந்தையையும் இழந்திருக்கிறேன்.திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் செயற்குழு நடைபெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை.அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் எனக் கூறி முதல்வரை சந்தித்தேன்.திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வரின் கையைப்பிடித்து கெஞ்சிக் கேட்டேன். கடைசியாக பார்ப்போம் என்றார் முதலமைச்சர்.
அன்று தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால்,கருணாநிதியின் உடலுக்கு பக்கத்தில் என்னை தான் புதைக்க வேண்டிய சூழல் வந்திருக்கும்.திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி கிடைத்தது வழக்கறிஞர்கள் குழுவுக்கே அந்த பெருமை சேரும்.திமுக தலைவர் கருணாநிதி வழிநின்று நமது கடமையை செய்வோம்.அவரது எண்ணங்களை நிறைவேற்ற உறுதி ஏற்போம்”. இவ்வாறு பேசினார்.