November 15, 2016
தண்டோரா குழு
ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கோரி, தில்லி சட்டப் பேரவையில் தீர்மானம் செவ்வாய்க் கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி, அஞ்சலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் மணிக்கணக்கில் பொதுமக்கள் நின்று வருகின்றனர்.
வணிகர்கள், சிறு, குறு தொழிற்சாலை நடத்துபவர்கள் என பலதரப்பு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிடக் கோரியும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.