November 22, 2018
தண்டோரா குழு
கோவை வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வனத்துறை இந்த பதிலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில்,கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வெள்ளியங்கிரி மலையில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் வனப்பகுதியில் குரங்கனி விபத்து போன்று தீ விபத்து ஏற்பட வாய்புள்ளது.
வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசியல் கட்சியனர் பணம் வசூல் செய்வதாகவும்,அரசியல் பலத்தை பயன்படுத்தி வனத்துக்கு செல்ல பலரை அனுமதிப்பதாகவும் இதனால், அங்கு தீபம் ஏற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன்,ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,வனத்துறை தரப்பில் வெள்ளியங்கிரி வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால்,அங்குள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை.அதேசமயம் கோவில் வழிபாடு நடத்த மக்களை அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து,நீதிபதிகள் இவ்வழக்கை 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.