November 15, 2018
தண்டோரா குழு
எனது வாகனம் வரும் போது பொது மக்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதை காவல் துறையினர் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு 2129 மடிக்கணினிகளை வழங்கினார்.
ஆர்.எஸ்.புரம் அம்மனியம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் வேலுமணி,
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்த இலவச மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்பட்டு இந்த திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அருகில் விரைவில் இலவச ஐ.ஏ.எஸ் அகடமி அமைக்கபடவுள்ளது.படித்து முடித்து இன்டர்வியூ செல்லும் போது இன்டர்வியூவில் சிறப்பாக செயல்படுவதில்லை என தெரிவித்த அமைச்சர்,இதற்காக கோச்சிங் சென்டர்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
மேலும்,மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக இவற்றை செய்து வருவதாக கூறிய அவர்,தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருப்பதாக கூறினார்.
அப்போது,அமைச்சர் வேலுமணி விழா மேடையில் இருந்த படியே காவல் துறையினரிடம் நிகழ்ச்சிகளுக்கு எனது வாகனம் வரும் போது பொதுமக்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதை காவல் துறையினர் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும்,ஏற்கனவே காவல் துறையினருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி இருப்பதாகவும்,ஆனால் காவல்துறையினர் மக்களை தடுத்து வருவதாகவும்,இனிமேல் பொது மக்களை தடுக்க கூடாது”.என தெரிவித்தார்.