July 27, 2018
தண்டோரா குழு
மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ள நடிகை ஸ்ருதி,தன்னை பாலியல் ரீதியாக காவல்துறை அதிகாரி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழகத்தில் கோவை,சென்னை,நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டில் பணியாற்றும் மென்பொறியாளர்களை குறிவைத்து மேட்ரிமோனியல் மூலம் தொடர்புக்கொண்டு திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சுமார் ரூ.2 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்ததாக கடலூரை சேர்ந்த நடிகை சுருதி,வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன்,தாய் சித்ரா,சகோதரர் சுபாஷ் ஆகிய நான்கு பேரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோவையில் கைது செய்தனர்.
இந்நிலையில் சுருதி உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது.தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ள சுருதி,கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
காவல் துறையினர் ஏழு நாட்களுக்கு காவலில் எடுத்து,விசாரிக்கும் போது தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,தன்னை நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசி சென்று விடுவோம் எனக் கூறி மிரட்டியதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவல் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும்,காகிதத்தை கொண்டு மறைத்து வைத்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,குறிப்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறை துணை ஆணையாளர் தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் இரண்டு பெண் காவலர்களும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என தெரிவித்து வற்புற்த்தியதாகவும் கூறினார்.திருமணம் செய்து கொள்ள மறுத்ததற்காக சிலர், வேண்டுமென்றே இதுபோன்று பொய் வழக்கு போட்டு உள்ளதாகவும்,இந்த வழக்கில் கூறப்பட்டது போல எந்த பணமும் யாரிடமும் வாங்கவில்லை என அவரது தாயார் தெரிவித்தார்.
தற்போது ஜாமீனில் வெளியாகி இருந்தாலும்,தன்னை கொலை செய்து விடுவதாக காவல் துறையினர் மிரட்டல் விடுப்பதாக ஸ்ருதி தெரிவித்தார்.இந்நிலையில் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெண்கள் நல ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.