November 30, 2018
தண்டோரா குழு
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அரசு பள்ளியில் ஒரு பகுதி சுற்றுச் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து மற்றொரு பகுதியில் இருந்த சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் நேற்று இரவு 3 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் வந்துள்ளது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாலை 3 மணியளவில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது பன்னிமடை அரசு பள்ளியின் ஒரு பகுதி சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.
உள்ளே புகுந்த காட்டு யானைகள் வெளியே செல்ல வழியில்லாமல் பள்ளியின் மற்றொரு புறம் இருந்த சுற்றுச் சுவற்றை உடைத்துக் கொண்டு வெளியேறியது. இதில் பள்ளியின் இரு இடங்களில் சுற்றுச் சுவர் சுமார் 20 அடி அகலத்திற்கு சேதமடைந்துள்ளது.பள்ளி சுற்றுச் சுவர் என்பதால் இரவில் சமூக விரோதிகள் உள்ளே புகாமல் இருக்க விரைவில் சீர் செய்ய வேண்டும் எனவும்,குடியிறுப்பு பகுதிகள் காட்டு யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,காட்டு யானைகளை விரட்ட முதுமலை மற்றும் சாடிவயல் யானைகள் முகாம்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 கும்கி யானைகள் பன்னிமடை அருகிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.