August 3, 2018
தண்டோரா குழு
கோவையில் சுகப்பிரசவத்திற்காக,இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து,இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது.இதன் பேரில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கு இலவச பயிற்சி வழங்கப்படும் என தனியார் நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.இந்த விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்திருந்தது.
ஏற்கனவே திருப்பூரில்,வீட்டில் சுகப்பிரசவம் பார்த்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், இதுபோன்று பொதுமக்கள் முயற்சிக்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த இலவச பயிற்சி முகாம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற பயிற்சியை தடை செய்யக் கோரி இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஹரிஹரன் புகார் தெரிவித்து உள்ளனர்.இந்த புகார் தொடர்பாக கோவை மாநகர ஆணையாளர் மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டதன் பேரில்,தற்போது சமந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர்.இதில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களை ஏமாற்றி மருத்துவம் பார்த்ததால் காவல் துறையினர்,ஹீலர் பாஸ்கரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த பயிற்சி முகாம் சர்ச்சையை ஏற்படுத்தியதால்,இந்த பயிற்சி முகாமை சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் ரத்து செய்துள்ளனர்.