August 18, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கோவையில் உள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி தண்ணீர் அதிக வேகத்துடன் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.கடந்த ஒரு மாத காலமாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் அதிவேகத்துடன் தண்ணீர் வருவதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.மேலும்,வனத்துறை மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் செல்லவோ அருவியில் குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கோவை குற்றாலம் அருவியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சாடிவயல் சின்னாற்றில் பெருக்கெடுத்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது.நொய்யல் ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு உருவாகி கோவை ஆலந்துறை மாதம்பட்டி வழியாக சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வருகிறது.இதனால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதன் காரணமாக பேரூர் படித்துறை பாலம் மூழ்கி காணப்படுகிறது.
இதேபோல் கோவையில் உள்ள புட்டுவிக்கி உள்ளிட்ட தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.நொய்யலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஆலாந்துறை,மாதம்பட்டி,சித்திரைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அதில் நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவும் குளிக்கவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.