November 10, 2018 தண்டோரா குழு
கோவையில் தனது மகன் திருமணத்துக்கு வருபவர்கள் மொய் வைத்தாக வேண்டும் என திருமண பத்திரிக்கையில் தந்தை ஒருவர் அச்சிட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் கல்லார் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மருதமுத்து.இவர் தனது மகன் திருமணத்துக்கு அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கையில்,கடந்த 38 ஆண்டுகளில்,நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன்.கடந்த 1980 முதல் இன்றுவரை,என் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல காரியம் இதுவே என்பதால்,தாங்கள் பெற்றுக்கொண்ட சீர் அல்லது மொய்யை மொத்தமாகச் செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணமகனின் தந்தை மருதமுத்து கூறுகையில்,
“எனக்கு மூனு பொண்ணுங்க,ரெண்டு பசங்க.என் சொந்தத்துல நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளையும் கலந்துக்கொண்டு தவறாம சீர்வரிசையும்,மொய்யும் செய்துட்டு இருக்கேன்.என்னோட ஒரு பொண்ணு 1990ல் இறந்துட்டா.அதுக்கு 140 ரூபாய்தான் கட்ட மொய் (இறப்பு வீட்டில் வைக்கப்படும் மொய்) வந்துச்சு.
என்னோட ரெண்டு பொண்ணுங்க,ஒரு பையன் காதல் திருமணம் செய்ததால் அவங்களுக்கு நான் விழா ஏதும் நடத்தல.இப்ப கல்யாணம் நடந்தது கடைசி பையனுக்கு.இதுதான் என் வீட்ல நடக்கும் முதல் நிகழ்ச்சி.அதுக்காகத் தான் பத்திரிக்கைல அப்படி சொல்லிருந்தோம்.
மண்டபம்,சாப்பாடுனு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல செலவாய்டுச்சு.நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல மொய் வெச்சிருக்கேன்.ஆனா,எங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் தான் மொய் வந்துள்ளது என கூறியுள்ளார்.”
இதே போல சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம்,பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்சு பவுஜ்தார் (29)என்ற போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் தன்னுடைய திருமண அழைப்பிதழில் போக்குவரத்து விதிமுறைகளை அச்சிட்டிருந்தார்.
இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர்,சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி டிக்கெட்டை போலவே திருமண பத்திரிக்கை அடித்து அசத்தியிருந்தார்.
அண்மையில் கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ அப்துல் ரஹ்மான் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் விதைகள் நிரம்பிய அழைப்பிதழை அச்சடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.