August 18, 2018
தண்டோரா குழு
தொடர் மழை காரணமாக கோவை முத்தண்ணன் குளம் நிரம்பி வழிவதுடன்,குளத்தில் மீன்கள் அதிகளவு கிடப்பதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை,ஆர்.எஸ்.புரம் அருகே 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது முத்தண்ணன் குளம்.இந்தக் குளத்தை ஒட்டி,1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இதனிடையே,பிளாஸ்டிக் கழிவுகளால்,முத்தண்ணன் குளம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.குறிப்பாக,அதன் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது.
இதற்கிடையே,கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளம் நிரம்பி வருகிறது.அதனால்,குளங்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.இதனால்,அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் தாங்களாகவே வந்து குளத்தில் இறங்கி மீன்களை பிடித்து அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர்.சில நேரங்களில் மீன்களை வாடிக்கையாளர் கண்முன்னே பிடித்து விற்பனை செய்து வருவதும் நடந்து வருகிறது.
மேலும்,மீன்கள் அதிகளவு கிடைப்பதால் ஒரு கிலோ மீன் ரூ.10 வரையில் குறைவாக கிடைக்கிறது.மழையினால் நீரின் அளவு உயர்ந்துள்ளதுடன்,மீன்களின் எண்ணிக்கையையும் அதிகமாகியுள்ளது.இருப்பினும்,வியாபாரம் நோக்கில் சிறிய மீன்கள் பிடிப்பதால் மீன்களின் வளர்ச்சி தடைப்படும் அபாயம் உள்ளதால் அதற்கான நடவடிக்கையும் மாநகாராட்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.முத்தண்ணன் குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் தற்போது சிவானந்த காலனி பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.