September 3, 2018
தண்டோரா குழு
கோவையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு கைதி முகமது ஆஜம் திருமணத்திற்கு வந்த 5 பேர் இந்து தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓரு மாத பாரோலில் சிறையில் இருந்து வெளியே வந்த முஹம்மது ஆஜம்மிற்கு நேற்று காலை கோவை போத்தனூரில் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையை சேர்ந்த ஜாபர்,இஸ்மாயில்,சம்சூதீன்,சலாவுதீன் மற்றும் கோவையை சேர்ந்த ஆசிக் ஆகிய 5 பேர் வந்துள்ளனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்,அன்பு மாரி,இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யும் திட்டத்துடன் வந்திருந்ததாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை ரயில் நிலையத்தில் வைத்து இந்த 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்திய உளவு பிரிவு போலீசாரும்,எஸ்.ஐ.யூ போலீசாரும் இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் இரண்டு பேர் தேசிய லீக் கட்சியையும், ஒருவர் எஸ்டிபிஐ கட்சியையும் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.மேலும் இந்து தலைவர்கள் மூன்று பேரையும் கோவையில் வைத்து அரிவாளாள் வெட்டி படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து இந்த 5 பேர் மீதும் ஊபா உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி முன்பாக 5 பேரையும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.இந்த 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டதை அடுத்து அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.