October 31, 2018 தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,பட்டாசுகளை கொசுக்கள் போன்று வடிவமைத்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச்சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா.இவர் எண்ணற்ற கலை படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்.இதில் பென்சில் முனையில் இயேசுநாதர் மற்றும் மினி உலககோப்பை,ஜல்லிகட்டு போராட்டம்,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா,ஜெயலலிதாவின் மைக்ரோ உருவம் போன்ற பல்வேறு கலைப்படைப்புகளை சமயத்திற்கு ஏற்றவாறு தங்கம் மற்றும் பென்சிலால் செய்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளை மாங்கனிகளில் சுபாஸ் சந்திர போஸ்,விவேகானந்தர்,மகாத்மா காந்தி, பாரதியார்,வ.உ.சி,நேரு,சர்தார் வல்லபாய் பட்டேல்,பகத்சிங்,காமராஜர் உட்பட பல தலைவர்களின் உருவங்களை வரைந்திருந்தார்.இந்நிலையில் தற்போது டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்,பட்டாசுகளை கொசுக்கள் போன்று வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து யு.எம்.டி.ராஜா பேசுகையில்,
“தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.பல ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.அத்துடன் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது.டெங்கு ஒரு அபாயகரமான நோய்.ஒவ்வொரு டெங்கு கொசுவும் ஒரு அணுகுண்டுக்கு சமம்.டெங்கு வருவதற்கு காரணம் மக்களே.நாம் எவ்வளவு தூரம் நமது சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு இதனை வராமல் தவிர்க்க முடியும்.சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,தீபாவளியை முன்னிட்டு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிய அணுகுண்டு பட்டாசில்,சாட்டை பட்டாசு,கம்பி,மத்தாப்பு,சேர்த்து வைத்து பிரம்மண்டமான கொசு வடிவிலான பட்டாசை வடிவமைத்துள்ளேன்” என்றார்.