November 19, 2018
தண்டோரா குழு
கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து சுமார் 830 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 டன் எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கோவை தெலுங்குபாளையம் நெடுஞ்செழியன் வீதி பகுதியில் குட்கா பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது.
இத்தகவலின் பேரில் நேற்று இரவு அங்கு சென்ற கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியான கோவை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சின்னதுரை என்பவருக்கு சொந்தமானகுடோனுக்கு சீல் வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை அந்த குடோனை திறந்த அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 830 கிலோ எடையிலான ஹான்ஸ், கணேஷ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
பின்னர் நடத்திய விசாரணையில் கோவை தாமஸ் வீதி பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் என்பவர் சின்னத்துரையிடம் குடோனை கடந்த மாதம் வாடகைக்கு எடுத்திருந்ததும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவைக்கு கொண்டுவந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.