October 30, 2018
தண்டோரா குழு
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பீளமேடு கொடீசியா மைதானத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் ஆணையர் சுமிர் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையர் லட்சுமி மேற்பார்வையில் பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் உதவி ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது,மதுரையை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் சக்திவேல்(48),அவரது சகோதரி ஈஸ்வரி மற்றும் உறவினர் அசோக் ஆகியோர் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கோகுல கண்ணன்,முகம்மது ரபீக்,ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு,பிரவீன் ஆகியோர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 56 பொட்டலங்களில் கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சா,கடத்தலுக்கு பயன்பட்ட ஒரு கார்,இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பீளமேடு காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.