November 19, 2018
தண்டோரா குழு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி,சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் தமிழக முதல்வர் பழனிச்சாமி செப்டம்பர் 30ம் தேதி அறிவித்தார்.இதற்காக 2.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.டிசம்பரில் இந்த வளைவை திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில்,MGR நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர்,உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில்,ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன்,பி.ராஜமாணிக்கம் அமர்வு,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை திறக்க கூடாது.வளைவு கட்டப்பட்டு வரும் இடம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும்.கட்டுமானப் பணிகளை முடித்துக்கொள்ளலாம் ஆனால் வழக்கு முடியும் வரை அதனை திறக்கக்கூடாது என உத்திரவிட்டனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,இது குறித்து ஜன.21க்குள் பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.