November 22, 2018
தண்டோரா குழு
சென்னை எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டவை நாய்க்கறி அல்ல ஆட்டு இறைச்சி தான் என அதை ஆய்வு செய்த சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை,மாநகராட்சி சுகாதாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது அந்த பார்சல்களில் துர்நாற்றம் வீசிய ஆட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் பார்சல்களில் இருந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் நாய் இறைச்சியாக இருக்கும் என்றும்,ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியை சேர்த்து பார்சல்களில் அனுப்பியிருக்க கூடும் என்றும் சந்தேகம் அடைந்தனர்.இதனையடுத்து அதிகாரிகள் இறைச்சி பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து,ஒரு உருப்படியை மட்டும் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.நாய் இறைச்சி என்றும் கெட்டுப்போன இறைச்சி என்றும் கூறி மீதியைப் பினாயில் ஊற்றி மண்ணில் புதைத்தனர்.எனினும்,இறக்குமதி செய்தது நாய் இறைச்சி அல்ல என்றும்,நீண்ட வால் கொண்ட ஆட்டின் இறைச்சி தான் என்றும் இறைச்சி இறக்குமதி செய்து விற்கும் வணிகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில்,இத்தகவல் காட்டுத் தீ போல செய்தி ஊடகங்களிலும்,சமூக வலைதளங்களிலும் பரவியது.இதனால்,சென்னை பிரியாணி கடைகளில் அலை மோதும் கூட்டத்தை பார்க்க முடியவில்லை.பல்வேறு இடங்களிலும் பிரியாணி விற்பனை வார இறுதி நாட்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இறைச்சியை மூலக்கூறு தொழில்நுட்பத்தின்படி சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தனர்.ஆய்வு முடிவில், அசைபோடும் விலங்கினத்தைச் சேர்ந்த செம்மறியாடு அல்லது வெள்ளாட்டின் இறைச்சி தான் அது எனத் தெரியவந்துள்ளது.