November 12, 2018 தண்டோரா குழு
மத்தியமைச்சர் அனந்த குமார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மத்திய ரசாயனம்,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் அனந்த குமார்(59). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனந்த குமார், கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பின் உடல்நலம் சீரானது.இதற்கிடையில்,மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,பெங்களூரு சங்கரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் காலமானார்.
பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில்,பொதுமக்களின் அஞ்சலிக்காக மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடல் வைக்கப்பட உள்ளது.மறைந்த அனந்தகுமாருக்கு தேஜஸ்வினி என்ற மனைவியும்,இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த 1959ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த அனந்தகுமார் சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வந்தார்.இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98,99,2004,2009,2014 என 6 தடவை வெற்றி பெற்றுள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ரசாயனம்,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.