November 20, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடித்து தின்னும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.அவர் பெயர்,ஊர் போன்ற தகவல்கள் இல்லாததால் அந்த மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே மருத்துவமனை ஊழியர்கள் போட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சுற்றி திரிந்த பூனை ஒன்று தரையில் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் உடலை தின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட,சில இளைஞர்கள் புகைப்படமாக எடுத்துள்ளனர்.இதை அந்த வார்டில் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த போதும் அவர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இருந்துள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த பின்னரே அவசர அவசரமாக இறந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
மேலும்,அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கொண்டு செல்லாமல், பூனை சடலத்தை கடிக்கும் வரை மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.